டாஸ்மாக் நிறுவனத்தில் ஏற்பட்ட முறைகேடு புகார் தொடா்பான வழக்கில், அதன் மேலாண்மை இயக்குநா் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மேலாண்மை இயக்குநா் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.