2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாது? – உயர் நீதிமன்றத்தில் புதிய திருப்பம்
சென்னை:
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்ற திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இதன் எதிரொலியாகவே, விஜய் இறுதியாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தேர்தல் காலத்திற்கு முன் வெளியிடக் கூடாது என்ற அழுத்தம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் திரைப்பட வெளியீட்டில் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தகவல்.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களின் அழுத்தம் காரணமாக, தேர்தல் முடியும் வரை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பு, திரைப்பட வெளியீட்டில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இதன் மூலம், தேர்தல் நெருங்கும் சூழலில் விஜய் தொடர்பான எந்தவொரு விஷயமும் அரசியல் ரீதியாக கவனமாக கையாளப்படுவதாகவும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தேர்தல் அரசியலின் மையப்புள்ளியாக மாறி வருவதாகவும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
























