காவிரிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை மே மாதம் 27ம் தேதி துவங்கும் எனவும், பருவமழை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும், வரும் ஆண்டில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கோரிக்கையை ஏற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.