Site icon No #1 Independent Digital News Publisher

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

நாட்டில் கடந்த 9 நாட்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ரூ.5 வரை உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த நடவடிக்கை பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களின் தலையில் மேலும் பெரும் சுமையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பொதுமக்களின் நலனை பாதுகாப்பதை விட, பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது” என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் பிரதிபலிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“பிரதமர் மோடியின் அரசு, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து பணத்தை பறிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது” என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Exit mobile version