Site icon No #1 Independent Digital News Publisher

கும்பகோணம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: கொடைக்கானலில் பிரியாணி கடைக்காரர் என்ஐஏ-யால் கைது

கும்பகோணம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு:

தஞ்சாவூர், ஆகஸ்ட் 20, 2025: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் நகர செயலாளரும், பாத்திரக்கடை நடத்தி வந்தவருமான ராமலிங்கம் (45) கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் முகமது அலி என்பவரை கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ராமலிங்கம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதமாற்றத்தைத் தட்டிக்கேட்டதால் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட ஐந்து பேரை முதற்கட்டமாகக் கைது செய்தனர். மொத்தம் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ தனியாக வழக்குப் பதிவு செய்து, இதுவரை 12 பேரை கைது செய்துள்ளது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆறு பேர்—ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34), அப்துல் மஜீத் (37), புர்ஹாதீன் (28), ஷாகுல் ஹீது (27), மற்றும் நபீல் ஹாசன் (28)—ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, இவர்களைப் பிடிக்க உதவுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலியை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். இதேபோல், திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ஜின்னா நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லாவின் வீட்டிலும், ஒட்டன்சத்திரம் மற்றும் வத்தலகுண்டு உள்ளிட்ட எட்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஆயுதங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலை வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ராமலிங்கத்தின் குடும்பத்தினர் பொருளாதார உதவிகளுடன் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருபுவனம் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ஐஏ-யின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version