Site icon No #1 Independent Digital News Publisher

மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025!

ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம்தேதி நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இன்று முதல் தொடங்க உள்ளன.

அதன்படி, இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் விளையாட உள்ளன. பெங்களூரு சின்னசாமி திடலில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Exit mobile version