சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் இருவர் கைது.
போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டியின் சென்னை பிரிவிற்கு,போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. இந்ததகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது.இந்தக்குழு 26ம் தேதி ஜனவரி, 2024 அன்று திருவொற்றியூரைச் சேர்ந்த நீலமேகன், வயது 50 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ மெத்தகுலோன் கைப்பற்றியது. மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றொரு குற்றவாளியான சம்சுதீனை கைது செய்து அவரது வீட்டிலிருந்து 68 கிலோ மெத்தகுலோன் கைப்பற்றியது. முதற்கட்ட பரிசோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள் மெத்தகுலோன் என தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு இந்தியாவில் தோராயமாக ரூ. 23.25 கோடி மற்றும் சர்வதேச மதிப்பு பல மடங்கு ஆகும். மேலும் இக்குழுவினர் 97 கிலோ ஆம்ரோஸ் எனும் வேதிப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இதன் தன்மையை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பாக சென்னை என்.ஐ.பி.சிஐடி-யில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு சங்கிலியையும் வெளிக்கொண்டுவர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்படி சிறப்பு காவல் குழுவினரை திரு. மகேஷ் குமார் அகர்வால், இகா.ப, காவல்துறை கூடுதல் இயக்குநர் குற்றம் (ம) அமலாக்கம், சென்னை அவர்கள் பாராட்டி பணவெ குமதி அளித்தார்.
போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண்.10581, வாட்ஸ்அப் எண். 9498410581 மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

























